*உயிர் மீட்கும் மருத்துவம்*
46.ஆழ்மனமும் பிரபஞ்ச ஆற்றலும்
" மண்ணில் புதைந்தது
ஒரு கோடி இரகசியம்
வானில் மிதப்பது
பலகோடி அதிசயம்
உன்னில் உணர்வது
ஒளியாய் தோன்றினால்
தன்னில் இறையது
அருளாய் தோன்றுமே.! "
ஆழ்மன ஆற்றலை உணர்ந்துகொள்ளும் வாய்ப்பு ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும்.! அந்த ஒரு சிலரில் அடியேனும் ஒருவனாய் இருக்கிறேன். என்ற, காரணத்தால் மட்டுமே இதை நான் நம்புகிறேன்.! ஒருவேளை ஆழ்மன தரிசனத்தை நான் காணாமல் போயிருந்தால்,நிச்சயம் இதை நம்பியிருக்கவே மாட்டேன்.! ஏனெனில் … கண்ணில் புலப்படாத, அறிவிற்கு அகப்படாத எதையும், உயிரால் உணர முடியாத எதையும் நம்பும் வழக்கம் எனக்கு எப்பொழுதுமே கிடையாது.! ஆழ்மன தரிசனத்தை நான் முதல் முதலில் உணர்ந்தது 1998 ஆம் ஆண்டு சென்னையில் இருந்த பொழுதுதான்.! ஒரு பெரிய திரைப்பட இயக்குனராக வேண்டும். என்ற கனவுடன் காலத்தை கடத்தி வந்த காலத்தில் …ஒரு நாள் இரவில் தூங்கிக் கொண்டிருந்த போது … கனவு வாழ்க்கையில் ஒரு கனவு வந்தது. அதில்,காலையில் ஒரு தேவாலயம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது 500 ரூபாய் நோட்டு கிழே கிடக்கிறது.! அதை நான் எடுத்து சென்று எக்மோர் கெனட் லைனில் மசூதிக்கு அருகில் உள்ள ஒரு உணவகத்தில் போய் சாப்பிடுவதாக கனவு.! இந்தக் கனவு உண்மையிலேயே எனக்கு மிக மகிழ்வை தந்தது.! ஏனெனில், திரைக்கடலில் தொலைக்க நான் ஊரிலிருந்து கொண்டு வந்தப் பணம் முழுவதும் தீர்ந்து மூன்றுநாள் ஆகிவிட்டது.! பிறகென்ன பட்டினிதானே கிடக்க வேண்டும்.! அப்படிப்பட்ட ஒரு இரவில் … இடியாப்பமும் பாயாவும் அதுவும் பாய் கடையில், யாரோ பாதையில் போட்டுவிட்டுப் போன பணத்தை எடுத்துசென்று
சாப்பிடுவது போன்ற கனவு என்றால் - அது இனிக்கத்தானே செய்யும்.!
அந்தக் கனவு, கனவோடு போயிருந்தால் இப்ப இதுபோல் எழுதும் நனவு நடந்திருக்காது.! ஆனால்,அடுத்தநாள் காலை நான் இரவில் கண்ட கனவு அப்படியே நடந்தது.!
இது எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தாலும் இதுபற்றி நான் அப்பொழுது யாரிடமும் கூறவில்லை.! ஏனெனில், யாராவது அது என்னுடைய பணம் கொடு என்று கேட்டாலோ அல்லது கீழே கிடக்கும் பணத்தை எடுத்து காவல் நிலையத்தில் கொடுக்காவிட்டாலும் கூட பக்கத்தில் இருந்த கமிஷ்னர் ஆபிஸ் வாசலில் நிற்கும் காவலரிடமாவது கொடுத்திருக்கக் கூடாதா? என்று கேட்டு விடக்கூடாதே.! என்ற; அச்சத்தில் தான்.! அப்பொழுது அதை யாரிடமும் கூறவில்லை.! இதுபோலவே பல ஆண்டுகள் கடந்து நான் திரைப்படத்துறையில் சுந்தர் K விஜயன்,மஜீத் போன்ற இயக்குனர்களிடம் பணிபுரிந்த பின் ஒருநாள் ஒரு நாள் இரவில் ஒரு கனவு வந்தது …
மதிய நேரம் வடபழனி கோவிலில் இருந்து நூறடிச்சாலைக்கு குறுக்காக வரும் சாலையில் நான் ஒரு பைக்கில் வந்து கொண்டிருக்கிறேன் …
அப்பொழுது கையில் ஒரு பெரிய்ய பைய்யுடன் வரும் ஒருவர் என்னிடம் லிப்ட் கேட்டு ஏறுகிறார் …
சரியென்று அவரை ஏற்றிவிட்டு வரும்பொழுது … நூறடிச்சாலையை தொடுகின்ற இடத்தில், காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வர, நான் வண்டியை நிறுத்தினேன். இதைப்பார்த்த எனக்கு பின்னால்
உட்கார்ந்திருந்தவர் மெதுவாக எழுந்து நழுவ முயல காவலர்கள் அவரைப்பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனையிட அதில் அவ்வளவும் கஞ்சா.!
இந்த கனவு பலிக்காமல் போகும், என்றுதான் நினைத்தேன்.!
ஆனால் இந்த கனவையே நான் மறந்திருந்த ஒருநாள் மதிய வேளை அதுபோன்றே ஒருவரை ஏற்றிவந்து சரியாக மாட்டிக்கொண்டேன்.!
என்னுடைய நல்லநேரம், அந்த நபரை எனக்குத் தெரியாது என்றுகூறி நான் எனது வாகன ஆவணங்களை காட்டியதும், ஒரு பத்திரிகை நண்பரிடம் என்னைப் பற்றி விசாரித்துவிட்டு, உடனே அனுப்பிவிட்டனர்.!
எல்லாம் இறையாற்றல்.!
இதுபோல சில நாட்களில் நடக்க இருக்கும் பல சம்பவங்கள்,எனது கனவில் வந்திருக்கிறது.!
2011 ஆண்டு வாக்கில் நான் நாகர்கோவில் செட்டிக்குளத்தில், யோகா வகுப்பெடுக்க ஆரம்பித்த புதிதில் … ஒரு மாலை நேர வகுப்பில் பிராத்தனை முடித்து, உடல் தளர்வு பயிற்சி செய்து கொண்டிருந்த போது அங்கே, குள்ள உருவத்தில் ஒரு பெண் சுற்றிசுற்றி வந்து எனக்கு இரத்தம் வேண்டும் என்று கேட்பதுபோல் எனது மனதில் தோன்றியது.பேய்,பிசாசு போன்றவற்றில் எனக்கு பெரிய நம்பிக்கையில்லாததால், அதை அப்படியே அசட்டையாக விட்டுவிட்டேன்.!
ஆனால்,சிறிது நேரத்தில் யோகா செய்து கொண்டிருந்த சுப்பையா என்ற மாணவர் பின்பக்கமாக நிலை தடுமாறி சுவற்றில் மோதி தலையில் அடிப்பட்டு இரத்த வெள்ளத்தில் மயங்கி சாய்ந்தார்.!
உடனே நாலைந்து மாணவர்கள் சேர்ந்து அவரை மருத்துவமனைக்கு கூட்டிச்சென்று தையல் போட்டு
வீட்டில் கொண்டு போய் சேர்த்தோம்.! சுப்பையாவிற்கு பெரிய அதிஷ்டம் என்னவெனில், அவரின் பின் தலை அடிபட்ட இடத்திற்கு ஒரு இஞ்ச் மேலே நாங்கள் வழக்கமாக பேனர் கட்ட பயன்படுத்தும் ஒரு ஆணி இருந்தது. அவரின் தலை அதில் மோதி இருந்தால் பெரிய பாதிப்பாக இருந்திருக்கும்.!அது போலவே,இது நடந்த அன்று வழக்கமாக அந்த இடத்தில் நின்று பயிற்சி செய்யும் ஒரு பெண் வரவில்லை.! அது ஒரு வகையில் அவருக்கு நல்லதாக போய்விட்டது.!
இந்த சம்பவத்திற்கு பின் நான் 3 நாள் யோகா பள்ளிக்கு விடுமுறை அளித்துவிட்டேன்.! ஏனெனில்,எனது யோகா குருநாதர்களில் ஒருவரான சுவாமி வெங்கட் இரமணன் முன்பு கூறுவார் " ஏதாவது ஒரு நேரத்தில்,எந்த எதிர்மறை ஆற்றலாவது உங்களை சூழ்ந்துள்ளதாக நீங்கள் உணர்ந்தால், உடனே எல்லா செயல்களையும் நிறுத்திவிட்டு ஏகனான, சிவனை நோக்கி தியானம் செய்து,
அமைதியாக இருந்துவிடுங்கள்.!
அதனோடு போராடவோ, அதனை ஆராயவோ முயலாதீர்கள் " என்பார்.!
அதையே அன்று செய்தேன்.!
இது போன்றே, சில நடக்க முடியாத படுத்தப்படுக்கையில் உள்ள நோயாளிகளை பார்க்கும் போது எனக்கு சில நேரம் அவர்கள் நடப்பது போலவும், நன்றாக இருப்பது போலவும் தோன்றும் அதுபோல் பல நாட்கள் அப்படியே நடந்துள்ளது.!
ஒரு நாள் ஒரு நண்பர் களியக்காவிளையில் ஒரு இயற்கை முகாம் நடத்த வேண்டும். என்று வந்திருந்தார், எனக்கு அவரைப்பார்த்ததும் இவர் இன்னும் சில நாளில் இறந்துவிடுவார், முகாம் நடத்த மாட்டார். என்று, தோன்றியது.! இதை நான் அவரிடம் கூறவில்லை.! முகாம் என்று அவர் குறித்த நாளிற்கு மூன்று நாளைக்கு முன்பே அவர் ஒரு விபத்தில் இறை நிலையடைந்தார்.!
இதுபோன்றே ஒருநாள் இரவில் நான்
நாகர்கோவிலிலிருந்து திட்டுவிளைக்கு, பைக்கில் இறச்சகுளம் அருகே வந்து கொண்டிருந்த போது … எனக்கு ஒருகாட்சி தெரிந்தது …
அதாவது நான் போக வேண்டிய சாலையில் நீலநிற பைக்கில் சென்று கொண்டிருந்த ஒருவர், ஒரு பேருந்தில் அடிப்பட்டு உயிருக்கு போராடியவாறு கிடக்கிறார்.அவரை சுற்றிலும் நிறைய பேர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அடிபட்டவர் வெள்ளை நிற சட்டை போட்டிருந்தார் அது முழுவதும் இரத்தமாக இருப்பதாக எனக்கு தோன்றியது.! இது எனக்கு வண்டியில் வரும்போதே தோன்றியதால் நான்,உடனே பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டேன்.ஏனென்றால்,நான் வந்து கொண்டிருந்ததும் நீலநிற பைக் தான்.அதோடு நான் வெள்ளைக் கலர் சட்டை வேறு போட்டிருந்ததால் … நமக்கு தான் ஏதோ விபத்து நடக்கப் போகிறதோ? என்ற யோசனையில் வண்டியை நிறுத்தி கொஞ்சம் தாமதித்து பிறகு, பைக்கை உதைத்து கிளப்பி வரும் வழியில் … அரசங்குளி சாலையில் ஒரு தேவாலயம் இருக்கிறது. அதை தாண்டி ஒரு சுமார் 300 அடி தூரத்தில், ஒரு பேருந்து நிற்பது தெரிந்தது.!
அதை சுற்றிலும் நிறைய பேர் கூடி நின்றனர்.! நான் வழக்கம் போல் இதுவும் நிஜமாகி விட்டது என்ற வியப்புடன் அங்கு சென்று, சாலையில் துடித்துக் கொண்டிருந்தவரை பக்கத்தில் துவரங்காட்டில் உள்ள சுபம் மருத்துவமனையில் சேர்க்கலாம், தூக்குங்கள் என்று சுற்றி இருந்தவர்களிடம் கூறினேன்.!
அதற்கு அருகில் நின்று கொண்டிருந்த பேருந்து நடத்துனர்; "ஆசாரிப்பள்ளத்திலிருந்து ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருக்கிறது"
என்றார்;சுற்றி நின்றுகொண்டிருந்த சிலரும் " பக்கத்தில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல வலியுறுத்த இதற்கு பேருந்து ஓட்டுனர்,நடத்துனர் உள்ளிட்ட ஒரு சிலர் மறுத்து அடம்பிடித்தனர்.! அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் வந்தால் தான் பேருந்து ஒட்டுனருக்கு சாதகமாக வழக்கில் உதவுவார்கள் போல.! என்று நினைத்தபடி நான் கிளம்பி வீட்டிற்கு வந்துவிட்டேன்.!
அடுத்தநாள் தினத்தந்தி பத்திரிகையில் … 24 வயது கொத்தனார் ஒருவர்,பைக்கில் வந்து கொண்டிருந்த போது,எதிர்பாராத விதமாக பேருந்தில் மோதி விட்டதாகவும், ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்க் கொண்டு செல்லும் வழியில், மரணமடைந்து
விட்டதாக செய்தி
வெளியிட்டிருந்தனர்.!
அரசு சம்மந்தப்பட்டு விட்டாலே மனித உயிருக்கும் உணர்விற்கும் மதிப்பே கிடையாது.! என்பது உண்மைதான் போல.!
இது போலவே உத்தமர் பன்னீர் செல்வம் அய்யா, சசிகலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கி வெளியேறிய போது எனக்கு தமிழக ஆட்சி கலைப்பு.! என்று, தொலைகாட்சியில் செய்தி போடுவதாக ஒரு கனவு வந்தது.!
இதுதான் கிட்டத்தட்ட ஏழு மாதம் ஆகியும்,இன்றுவரை நிறைவேறவில்லை.< 22/9/2017> விரைவில் இதுவும் நனவாகும்.! என்று நிச்சயமாக நம்புகிறேன்.! இப்படி எனக்கு வந்த ஆழ்மன தரிசனம் அனைத்துமே அடுத்த வினாடி முதல் ஏழெட்டு மாதத்திற்கு பிறகு நடப்பதாகவே தெரிகிறது.! இதுபோல், சிலருக்கு சிறுவயதிலேயே இறந்த காலம்,முன் ஜென்ம நினைவுகள் தொடருவதாக கூறுகிறார்கள்.! எதிர்கால அல்லது இறந்தகால ஆழ்மன தரிசனம் எதுவாய் இருந்தாலும் அதை ஒரு
சிலர் உணரக்காரணம்.!
என்னவெனில், இந்தப் பிரபஞ்ச உயிரியக்கத்தில் இதுவரை நடந்துமுடிந்த,நடக்க இருக்கும் அனைத்தும் காட்சிகளாக பதிந்துள்ளது.! ஒரு சிலருக்கு மட்டும்
இயற்கை அதை வெளிப்படுத்துகிறது.! விஞ்ஞானம் இந்த ஆற்றலை E.S.P ஆற்றல் என்று கூறுகிறது.! பல மத நூல்களை எழுதியவர்கள், ஆன்மீக வாதிகள்,கவிஞர்கள்,எழுத்தாளர்கள்,விஞ்ஞானிகள் தங்கள் படைப்பு சார்ந்து சிந்திக்கும் போது,ஆழ்மன தரிசனத்தை கண்டு பிரபஞ்ச இரகசியங்களை உணர்கிறார்கள்.!திருவள்ளுவர்,நாஸ்டர்டாம் போன்றோரின் எழுத்துகளில் அவற்றின் சுவடுகளை காண முடிவதாக
இது பற்றிய ஆய்வுகள் கூறுகிறது.!
தனது நான் கடவுள் நூலில் பரஞ்சோதி மகான் தனது ஆழ்மன தரிசனங்களைப் பற்றி குறிப்பிட்டு எழுதி உள்ளார்.!
சிலருக்கு உண்மையல்லாத,மாறுபட்ட எண்ணங்களும் வருவதுண்டு இதற்கு காரணம் என்னவெனில்,
ஒருவருக்கு ஆழ்மன ஆற்றல் அதுவாக வரும்போது சரியான விசயங்கள் வரும்.! ஆனால் ,தான் பல நாட்கள் இந்த ஆற்றலை அடைய வேண்டும் என்று முயற்சி செய்து வருபவர்களுக்கு தங்கள் கற்பனையும் ஆசையும், சேர்ந்து
மாறுபட்ட போலியான காட்சிகளை காட்டுகிறது.!
தியானத்தில் எதிர்காலம், இறந்த காலம் மற்றும் பல்வேறு நிகழ்வுகளை கண்டறிய சம்யமா என்ற ஒரு தியான முறை உள்ளது.! அதை பயிற்சி செய்து வருபவர்களும் பிரபஞ்ச இரகசியங்களை அடையலாம்.!
இதுபற்றி நான் எனது மஹாயோகா
நூலில் எழுதியுள்ளேன்.!
நலம் பெருகட்டும் …
-ஏகப்பிரியன் DYT
தொடரும் …
aumherbals.blogspot.in
You Tube - amyoga trust
yoga for all
No comments:
Post a Comment