மனதோடு பேசுகிறேன்
9.குப்பைகளை கோபுரமாக்கும் வர்த்தக வாழ்க்கை முறை
பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்வரை ஒரு திருமண விருந்து என்றால் அதிகப்பட்சம் ஒரு பதினைந்து வகை துணை உணவுப்பொருளோடு விருந்து முடிந்து விடும். குடிப்பதற்கு நீரில் சீரகம் போட்டு பெரிய வார்ப்பில் காய்ச்சி வைத்திருப்பார்கள். பரிமாறுவதற்கு உறவினர்கள்,நண்பர்கள் குழுமி இருப்பார்கள். தெரிந்த ஒரு சமையல்காரரை அழைத்து இத்தனை பேருக்கு சமைக்க வேண்டும் என்று கூறினால் அவர் ஒரு லிஸ்ட்டை கொடுப்பார். அதில் பெருங்காயம்,சீனி,மைதா,சுத்திகரித்த எண்ணெய் போன்ற ஒரு சில உடலுக்கு ஒவ்வாத பொருள்கள் மட்டுமே இடம் பிடித்திருக்கும். சமையல்காரர் மற்றும் உதவியாளர்களுக்கான சம்பளத்தை கொடுத்து விட்டால் அறுசுவை விருந்தை அழகாக சமைத்து கொடுத்து விடுவார்கள்.வெளிநாட்டு முறை திருமண விருந்து என்றால் அங்கு பிரியாணி,நெய்ச்சோறு,கறி என்ற ரீதியில் முடிந்து விடும். மாலை வரவேற்பு என்றால் மிக்சர்,ஜிலேபி,கேக்,வாழைப்பழம்,தேநீரோடு தீரும்.இன்றைக்கு சமைப்பதற்கு அஜினாமோட்டா,வண்ணப்பொடி போன்றவை மிக அவசியத்தேவை. டைனிங் டேபிளில் விரிக்க பேப்பர் சீட்டில் ஆரம்பித்து இரசாயணம் தடவிய பேப்பர் கப் பாயாசம் பறிமாற, மினரல் வாட்டர் பாட்டில் குடிக்க,மேலும் பாப்ஹார்ன் மிசின்,ஐஸ்கிரீம். மாலை விருந்தில் புரோட்டா,இடியாப்பம்,ஆப்பம் போன்றவற்றை மண்டபத்திலேயே போடுவதற்கு தனித்தனி மாஸ்டர்கள், பரிமாறுவதற்கு கேட்டரிங் படித்த தனி ஆட்கள், மணமேடை ஜிகுனா அலங்காரம், தனக்குத்தானே ஊரில் பல இடங்களில் வைக்கப்படும் பேனர்கள் என்று இன்றைய திருமண நிகழ்வை முழுக்க முழுக்க ஒரு வர்த்தக வளையமாக மாற்றி விட்டுள்ளோம். இப்படிப்பட்ட ஒரு விருந்தில் கலந்துகொண்டு வீட்டில் வந்து உறங்கிய பலரையும் இந்த உணவு முறையும் வாழ்க்கை முறையும் பரலோகம் அனுப்பி உள்ளது. அப்படியே பரலோக யோகம் கிடைக்கா விட்டாலும் கூட திருமண விருந்தில் கலந்து வந்த நாளில் வயிறு உப்புசம்,சிறிய தலைச்சுற்று,நெஞ்செரிச்சல்,மூச்சுத்திணறல் போன்றவை பலருக்கும் ஏற்பட்டிருக்கும். இது போன்ற நிலைக்கு முக்கியக்காரணமே மிதமிஞ்சிய செயற்கை இரசாயணம் கலந்த உணவுகள்தான். இதை தவிர்த்து அனைவருமே மீண்டும் நமது பழைய முறையில் ஆடம்பரம் இல்லாமல் தேவையான உணவுகளை மட்டுமே இயற்கை முறையில் தயாரித்து வழங்கினால் அது நம்மை வாழ்த்த வந்தவர்களின் ஆரோக்கியத்தை உயர்த்தும். விசேச விருந்தை நம்பி தற்போது கடை விரித்திருக்கும் பேப்பர் தட்டு,மினரல் வாட்டர்,ஐஸ்கிரீம் வண்டி,பாப்கார்ன்,அதிகமான சமையல் மாஸ்டர்கள்,கேட்டரிங் பணியாளர்கள் போன்றவற்றை நிச்சயம் ஒழித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இத்தனை வர்த்தக வளையத்தினால் ஏற்படும் நோய்கள்,பண விரயம் போன்றவற்றை தாண்டி வாட்டர் பாட்டில்,பேப்பர் கப்,பேனர்கள் போன்றவற்றால் ஏற்படும் கழிவு குப்பைகளால் ஏற்படும் சுற்றுப்புற மாசு போன்றவை நமது சுற்றுச்சூழலை வேகமாக கெடுக்கிறது. இவற்றின் மூலம் சேரும் குப்பைகள் பிளாஸ்டிக் பாட்டில் உள்ளிட்டவை மண் வளத்தை கெடுப்பதோடு மழை,புயல் போன்ற இயற்கை பேரிடர் ஏற்படும் போது நமது சுற்றுப்புறத்தில் தேங்கியுள்ள நீரை வெளியேற விடாமல் தடுக்கிறது. திருமண விருந்தில் மட்டும் தானா நாம் இவைகளை பயன்படுத்துகிறோம் எல்லா இடங்களிலுமே தானே இவற்றை பயன்படுத்துகிறோம்? என்று நீங்கள் கேட்டால்; அது உண்மைதான். முடிந்தவரை புதிய குப்பைகளை உருவாக்கும் எந்த ஒரு செயலையும் நாம் செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது. பிளாஸ்டிக் ஷீட்டில் பள்ளி,கல்லூரி, அலுவலகங்களுக்கு உணவு மடிப்பதை தவிர்த்து டிபன் பாக்சில் உணவை கொண்டு போகலாம்,கொர்கொர்,லேஸ் போன்ற இரசாயண காற்றடித்த பாலிதின் பைகளில் உள்ளதை வாங்கி உண்ணாமல் பேப்பரில் மடித்த உப்புக்கடலை,வேர்க்கடலையை வாங்கி உண்ணலாம். இப்படி செய்தால் சாப்பாடை சாப்பிட்ட உடன் டிபன் பாக்சை கழுவி வைத்தால் போதும். அங்கு எந்த குப்பையும் சேராது. கடலையை தின்று விட்டு காகிதப் பேப்பரை மண்ணில் வீசினால் அவை மரத்திற்கு உரமாகி மீண்டும் பேப்பராக மாறிவிடும். கடைகளில் எண்ணெய்,பால், தயிர்,மளிகை சாமான்கள் வாங்க செல்லும் போது சிறிய பாத்திரமோ,பையோ கொண்டு போய் பொருட்களை வாங்குவது மிகவும் நல்லது.எங்கேனும் பயணம் போகும் போது,போகும் இடமெல்லாம் ஒரு புது சுத்திகரித்த நீர் என்று கூறப்படும் பிராணசக்தியை நீக்கிய சக்கை நீரை வாங்கி குடித்துவிட்டு பல மக்காத குப்பைகளை மண்ணில் வீசி மண்ணுயிர்களுக்கு எமனாவதோடு, நமது ஆரோக்கியத்தையும் கெடுக்காமல் வீட்டில் இருந்தே தரமான ஒரு பாட்டிலில் நீர் கொண்டு சென்றுவிட்டு செல்லும் இடங்களில் உள்ள இரயில்,பேருந்து நிலையங்களிலும் ஓட்டல்களிலும் தேவையான நீரைப்பிடித்து வைத்து குடிக்க பயன்படுத்தலாம்.
வழியில் சாப்பிட பிஸ்கெட்,பிரெட்,சிப்ஸ் போன்ற பாக்கெட் குப்பைகளை கொண்டு செல்லாமல் லேசாக காயவைத்த தேங்காய்,ஊறவைத்த/வறுத்த தானியங்களை ஒரு சிறிய சில்வர் டப்பாவில் எடுத்து சென்றால் அதுவே ஒருவாரம் வரை கெடாமல் இருக்கும்.[நான் வெளியூர் பயணங்களில் இவ்வாறுதான் செய்கிறேன்]
பயணங்களில் தேவையெனில் அந்தந்த பகுதியில் கிடைக்கும் நாட்டு வாழைப்பழம்,இளநீர்,கடலை மிட்டாய் போன்றவற்றை வாங்கி பயன்படுத்தலாம்.
இது இன்றைய அவசரத்தேவை;
ஏனென்றால், நமது தலைநகர் டில்லியில் இன்று பலரும் மாஸ்க் அணிந்துதான் வலம் வருகிறார்கள். இந்த அளவில் கேடு நம்மை நெருங்கி விட்டது. அதுசரி உணவு கழிவு மற்றும் பாலிதின் பையால் மட்டுமா மாசு ஏற்படுகிறது?
வீட்டிற்கு அடிக்கப்படும் வண்ணங்கள்,கொசுவை அழிக்க,கரப்பானை ஒழிக்க,டாய்லெட் பளிச்சிட ,மேனி மின்னிட என்று நம்மிடம் திணித்த பலப்பல இரசாயண குப்பைகள், வாகனப்புகை,தொழிற்சாலை கழிவுகள்,அணு உலைக்கழிவுகள் என்று எத்தனையோ விதத்தில் மாசு ஏற்படுகிறதே என்று நீங்கள் கேட்கலாம்; உண்மைதான். இந்திய கடல் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் குப்பைகளை கொண்டு வந்து கொட்டுவதற்கு பழைய மன்மோகன் அரசு அனுமதி கொடுத்துள்ளது, கேரளாவில் உள்ள இறச்சிக்கழிவுகளை தமிழகத்தில் கொட்டுவதை தமிழ்நாடு அரசு தடுப்பதே இல்லை,நொய்யல்,காவேரி போன்ற பல ஆறுகள் தொழிற்சாலை கழிவுகளால் நிரம்பி இயற்கையை கதற வைக்கிறது, வெளிநாட்டு இரசாயண கம்பெனிகளின் அழிச்சாட்டியத்தில் இந்தியாவில் பல ஊர்கள் இன்னும் புல் பூண்டு பூக்காத பாலைவனமாக மாறி உள்ளது. ஆனால் மத்திய அரசு இவற்றை எல்லாம் மறைப்பதற்காகவே தூய்மை இந்தியா என்று கவர்னர்களையும் நடிகர்களையும் ஊர்ஊராக அழைத்துச் சென்று குப்பைகளை வாரி வருகிறது.
நாம் இந்த குப்பைகளை போடாமல், நாட்டையே குப்பையக்கப் போகும் மித்தேன் வாய்வு,ஹைட்ரோ கார்பன்,நியுட்ரினோ திட்டங்களை நாட்டை விட்டு விரட்ட அரசை வற்புறுத்த வேண்டிய வேலையை செய்வோம். அரசு நினைத்தால் ஒரே கையெழுத்தில் நாட்டையே பாதுகாக்க முடியும்.
அதை செய்ய ஆள்வோர்கள் தயாரில்லை. ஏற்கனவே வாகனப்புகை அதிக மாசுகளை ஏற்படுத்தி வரும் சூழலில் மானியத்தோடு அரசு தற்போது பாதி விலையில் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கப்போகிறதாம். சுற்றுச்சூழலைப் பற்றியோ இயற்கையைப் பற்றியோ எந்த அரசிற்கும் கவலையே இல்லை. என்பதை இதன் மூலம் நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும். இரசாயண மருந்து,இரசாயணபூச்சிக்கொல்லி, இரசாயண உணவு என்று எதையும் இறக்குமதி செய்து இந்த பன்னாட்டு குப்பை குவியலை கோபுரம் என்பதாக கூறி சொந்த நாட்டு மக்களிடம் விற்று கமிசன் பெறுவதையே இரு அரசுகளும் ஒரு கொள்கையாகவே வைத்துள்ளது.மக்களாகிய நாம்தான் புதிய குப்பைகள் உருவாவதை தடுக்க உறுதியேற்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
ஆம் நட்பாளர்களே,இப்பொழுதே மிகவும் தாமதமாகி விட்டோம். ஏனென்றால் 180 பசுமை நாடுகள் பட்டியலில் தற்போது இந்தியா 177 வது இடத்தில் இருக்கிறதாம். இது மிகமிக வேகமாக செயல்பட்டே ஆக வேண்டிய தருணம். நாம் நேற்று வரை சமைத்த "மண்ச்சட்டி உடைந்தால் மண்ணோடு கலக்கும்,சாப்பிட்ட இலை மாட்டுக்கு உணவாகும், மாட்டுச்சாணம் மண்ணுக்கு உரமாகும், மண்ணில் விளைந்ததை மனிதன் சாப்பிடுவான்,மனிதன் செத்தா மண் சாப்பிடும்."
இதுவே மண்ணோடு இயைந்த மகத்தான வாழ்வு.
ஒவ்வெரு மக்காதப் பொருளையும் இரசாயணப் பொருளையும் பார்க்கும் போதும் எனக்கு இந்தக் குப்பைகளின் தேவை இல்லவே இல்லை. என்ற நிலை வரும்வரை நாம் ஒவ்வெருவரும் இயற்கையோடு இயைந்து வாழ்ந்திட வேண்டும்.!
முக்கியமாக உணவுப் பொட்டலத்தின் மூலமாக வரும் குப்பைகளை சுத்தமாக இல்லாமல் செய்ய வேண்டும். ஷாம்பு சாஷே,சீகக்காய் போன்றவற்றை சிறுசிறு அளவில் வாங்காமல் பெரிய டப்பாக்களில் வருவதை வாங்கி வைத்துக் கொண்டு வெளி இட உபயோகத்திற்கு தேவையான பொடியை ஒரு தாளில் மடித்து எடுத்து சென்று பயன்படுத்த வேண்டும்.
ஒன்றிரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள இடங்களுக்கு நடந்து போவதை வழக்கமாக கொள்ள வேண்டும்.
அது போலவே அவரவர் தனி வாகனங்களை அதிகமாக பயன்படுத்தாமல் முடிந்தவரை பேருந்து,இரயில் போன்ற பொது வாகனங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும். ஒரே பகுதியில் இருப்பவர்கள் கோவில் விழாக்கள்,இல்ல விசேசங்களுக்கு ஒரே குழுவாக வேன் போன்ற பொது வாகனத்தில் சென்று வருவது செலவை குறைப்பதுடன் மற்றவர்களோடு பழகுவதற்கும் உதவும்.தவிர்க்க முடியாத சூழலில் பயன்படுத்தி விட்ட ஷாம்பு சாஷே, சாக்லேட் கவர்,பிஸ்கெட் கவர்,பேஸ்ட் டியூப்,பிரஷ் போன்றவற்றை ஆறு,குளங்கள், பாத்ரூம்,டாய்லெட்,சாக்கடை போன்றவற்றிலோ தெருக்களிலோ வீசாமல் அதற்கென உள்ள குப்பை தொட்டியில் போடுவதற்கு குழந்தை பருவம் முதலே அனைவரையும் பழக்க வேண்டும்.
இது போன்ற விசயங்களை நாம் ஒரு வாழ்க்கை முறையாக வைத்துக்கொண்டால் மட்டுமே எத்தகைய சூழலிலும் இயற்கை நம்மை பாதுகாக்கும் அரணாக செயல்படும் அல்லது இயற்கை இன்னும் இன்னும் நம்மை கதற வைக்க காத்திருக்கிறது.!
இயற்கை நின்று கொல்லும் …
-ஏகப்பிரியன் DYT
amyogatrust.blogspot.com
aumherbals.blogspot.com