மனதோடு பேசுகிறேன்
4 A. மனதை நிறுத்தும் கலை
இயற்கையின் ஆன்மாவான மூலப்பொருளில் ஏற்பட்ட நடுக்கத்தினாலேயே மனிதன் தோன்றினான், மனிதனின் செயல்களே வாழ்வை தோற்று வித்தது, வாழ்வின் மூலம் மனித ஆன்மாவில் பதிந்துள்ள பழைய பதிவுகளே, இவையே மீண்டும் மீண்டும் புதிய பிறவியைத் தருகின்றன, பிறவி மீண்டும் செயல்களைத் தருகிறது, செயல்களே எண்ணங்களை தூண்டுகின்றன, எண்ணங்கள் மீண்டும் புதிய செயல்களுக்கு வழி கோலுகின்றன, செயல்கள் மீண்டும் மீண்டும் புதிய பதிவுகளை உருவாக்கும், பதிவுகள் மீண்டும் பிறவியைத் தருகிறது. இயற்கையின் மூல நிலையில் எண்ணம் செயல் எதுவுமே இல்லை, மனிதனின் மூலமோ எண்ணங்களால் நிரம்பியுள்ளது. இதுவே பரம் பொருளான இயற்கை ஆன்மாவிற்கும் மனித ஆன்மாவிற்கும் இடையில் ஒரு திரையை உருவாக்கி உள்ளது. திரை விலக வேண்டும் அல்லது நமது முயற்சியால் திரையை விலக்க வேண்டும்.இது நடந்து விட்டால் மனிதன் மீண்டும் தனது பூரண நிலையை அடைந்து விடுவான்.
இதுவே பதஞ்சலி யோகச்சூத்திரத்தின் சுருக்கம். இப்படி நாம் கூறுவதை சிலர் ஏற்க மறுக்கலாம். ஏனெனில், யோகச்சூத்திரத்தில் இப்படி அனைத்தையும் எளிதில் விளங்கும் வகையில் தமிழில் கூறாமல் பிரகிருதி,புருசன்,சம்ஸ்காரம்,விருத்தி,அபாவம்,கிரியை,பிரம்மம் என்று அதில் கூறப்பட்டுள்ள அனைத்து வார்த்தைகளும் சமஸ்கிருதத்திலேயே இருக்கிறது. தமிழில் மொழி பெயர்த்தாலும் இந்த வார்த்தைகளை மட்டும் தமிழில் மாற்றாமல் அப்படியே போட்டு விடுகிறார்கள். இதன் காரணமாகவே தமிழரான பதஞ்சலியின் யோகச்சூத்திரம் பல தமிழர்களுக்கே இன்னும் விளங்காமல் உள்ளது. இது எப்படியெனில் Take என்ற ஆங்கில வார்த்தைக்கு எப்படி - எடு,கொண்டு செல்,இரு என்று பல நிலைகளில் அதன் பொருள் மாறி மாறி விளங்குமோ, அது போலவே சமஸ்கிருதத்திலும் இடத்தை வைத்து பொருள் மாறுபடும். உதாரணமாக புருசன் என்பது மனிதனையும் குறிக்கும் மனித ஆன்மாவையும் குறிக்கும். இதற்கு கணவன் என்று இன்னொரு பொருளும் உண்டு. விருத்தி என்றால் சுத்தம்,தெளிவு,உயர்வு என்று பொருள். இன்னொரு பொருள் திரை என்பது. இது போன்ற குழப்பங்களாலேயே பதஞ்சலி யோகச்சூத்திரம் இன்னும் பலருக்கு பயனளிக்கவில்லை. சமஸ்கிருத புலமையோடு தமிழ் நிபுணத்துவமும் உள்ளவர்கள் பதஞ்சலி யோகச்சூத்திரத்தை முழுவதும் நவீன தமிழில் எழுதினால் அது யோகத்திற்கு செய்த பெருந்தொண்டாக அமையும் என்பதோடு மனித வாழ்விற்கும் மிக உதவியானதாய் இருக்கும். என்பது; அடியேனின் கனிவான வேண்டுகோள்.சரி நவீன மனிதனுக்கு பதஞ்சலி யோகச்சூத்திரத்தால் என்ன பயன் என்று கேட்டால் நலமான வாழ்க்கையோடு, மனமின்றி -அதாவது எண்ணமின்றி வாழும் கலையையும் பதஞ்சலி யோகச்சூத்திரமே மிகத் தெளிவாக விளக்கி உள்ளது.
மனதில் எழும் குழப்பமான எண்ணங்களே அமைதியின்மையையும் பல்வேறு நோய்களையும் உருவாக்குகிறது, என்பதை அனைவரும் அறிவோம்.
எண்ணம் மனிதனுக்கு இரண்டு விதத்தில் வரும், ஒன்று மனதில் ஏற்கனவே உள்ள கடந்த கால பதிவின் மூலம் எண்ணங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும், மற்றொன்று நமது கண்களால்,காதுகளால், உடலின் தொடு உணர்வால் நம்மை வந்தடையும் அனைத்தும் எண்ணங்களை தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே இருக்கும்.பதஞ்சலியின் கூற்றுப்படி மனித மூலம் அதாவது மனித ஆன்மா மூலத்தின் மூலமான இயற்கை ஆன்மாவில் இருந்து பிரிந்து வந்தது முதல், அதன் மேல் ஒரு திரை இருக்கிறது.அந்த திரையைத்தாண்டி மனித மூலம் மீண்டும் மூல மூலமான பரம்பொருளோடு சேர வேண்டுமானால், முதலில் எண்ணத்தை நிறுத்த வேண்டும் அடுத்து,செயல்களை நிறுத்த வேண்டும். நிறைவாக தனது பிறவிக்கு காரணமான விந்து சக்தியை தூயப்பொருளாக்கி ஆவியாக அல்லது கட்டியாக மாற்றிவிட வேண்டும். விந்தாற்றல் உள்ள வரை ஒருவனுக்கு ஆசையும் எண்ணமும் பிறவியும் வந்து கொண்டே இருக்கும்.அதாவது விதை நெல்லை வறுத்து விட்டால் அது மீண்டும் முளைக்காது என்பதைப்போல் தான் விந்தை ஆவியாக்குதல் அல்லது கல்லாக மாற்றுதல் போன்றவை.
இதனடிப்படையையில் பரம்பொருளை அடைவதற்கு உருவாக்கப்பட்டதே துறவு வாழ்க்கை. எல்லா மதங்களும் கொள்கைகளும் ஒப்புக்கொள்ளும் ஒரே விசயம் என்னவெனில் … மனிதன் முதலில் நிறைவான,பூரணமான ஒரு நிலையில் இருந்தான், பிறகு அங்கிருந்து வழுவி தற்போதைய மனித நிலைக்கு வந்துள்ளான், மீண்டும் முயன்றால் பழைய மூல நிலையை அடையலாம். என்பதே;எல்லா குருமார்களும் திரட்டிய கருத்து. சேருமிடம் ஒன்றுதான். வழிகளே; வேறுவேறாய் இருக்கின்றன.
இது பற்றி எழுதுவதானால் அது அந்தமில்லாமல் சென்று கொண்டே இருக்கும். அதனால், முதல் பகுதியில் கூறியபடி மனதை நிறுத்தும் வழியை மட்டும் கூறி இந்தப்பகுதியை நிறைவு செய்து விடலாம்.
' மனத்தில் முழுவதும் நீக்கப்படாத எண்ணங்களே மேலெழுந்து வந்து செயல்களைத் தூண்டுகிறது ' அதனால் மனம் சொல்வதை கவனிக்க மட்டுமே செய்யுங்கள்.மனம் சொல்லும் செயல்கள் ஒவ்வென்றையும் செய்யாமல் உங்களுக்கு மிகவும் அவசியமான,முறையான செயல்களை மட்டுமே செய்யுங்கள். இதனால் அவற்றில் முழு வெற்றி கிடைக்கும்.
கண்ணில் பார்க்கும்,கேட்கும்,உணரும் எல்லா விசயத்தையும் மனதில் ஏற்றாதீர்கள். இதனால், மனதில் மகிழ்ச்சியும் அமைதியும் என்றும் நிறைந்திருக்கும்.மனதிலிருந்து மேலெழும் எண்ணங்களை வெறுமனே கவனிக்க கவனிக்க அவை விடைப்பெற்று விடும்.கண்களால்,காதுகளால்,புலன்களால்,தொடு உணர்வால் பார்க்கப்படும்,கேட்கப்படும், உணரப்படும் விசயத்தை 12 விநாடிகளுக்கு மேல் சிந்தனை செய்யாமல்,நீங்கள் வெறுமனே நிற்க நிற்க அவை மனதில் பதியாமல் இருக்கும். பிறகென்ன பூரண அமைதியும், அன்பும், மகிழ்ச்சியும், ஆரோக்கியமும், வெற்றியும், உங்களைத்தேடி வந்துவிடும்.! அப்படியானால் நாங்கள் ஒரு துறவியைப்போல மாற வேண்டுமா? "இல்லை விழிப்புணர்வு மிக்க மனிதராய் மாறுங்கள் " நீங்கள் விரும்பினால் சிரியுங்கள்,நீங்கள் விரும்பினால் சிந்தியுங்கள்,நீங்கள் விரும்பினால் அன்பாகவோ, கோபமாகவோ இருங்கள் எதன் பொருட்டும் உங்கள் சுயமான நிதானத்தை இழக்காதீர்கள் …!
நலம் பெருகட்டும் …
இன்னும் பேசுவேன் …
-ஏகப்பிரியன் DYT
amyogatrust.blogspot.com
aumherbals.blogspot.com