I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: காவலுக்கு ஆறுமுகம்

Friday, 22 December 2017

காவலுக்கு ஆறுமுகம்

#மனதோடுபேசுகிறேன்

5.காவலும் சேவையும்

" மனித உரிமைகளைக் காக்கும் மாபெரும் சக்தியாக காவல்துறை விளங்க வேண்டும்.அதை மீறும் பெரும் சக்தியாக அது மாறிவிடக்கூடிய சாத்தியமும் இருக்கிறது. "

-கிரண்பேடி I.P.S [1985]

இரவு பதினொரு மணி இருக்கும் அப்பொழுது நான் எனது அறையில் ஒரு நண்பரின் குறும்படத்திற்காக வசனம் எழுதிக் கொண்டிருந்தேன். கோடம்பாக்கம் சிவன் கோவில் தெருவில் இருந்த, அந்த மூன்று மாடி கட்டிடத்தில் மொத்தம் ஏழு  அறைகளை கட்டி இளைஞர்களுக்கு வாடகைக்கு கொடுத்திருந்தார் அதன் உரிமையாளர். எனது அறையில் மொத்தம் மூன்று பேர் தங்கி இருந்தோம். மூன்றுபேருமே கலைத்துறை ஆர்வலர்கள். நாங்கள் இருந்தது தரைத்தளத்தின் முதல் அறையில், அந்த நேரத்தில் எனது நண்பர்கள் இரவு உணவு உண்பதற்காக வெளியே சென்றிருந்தனர். எங்கள் அறை வாசலில் " டேய் ஆர்வக்கோளாறு வெளில வாடா, உனக்கென்ன பெரிய ஜாக்கிஜான்னு நினைப்பா மாவனே பட்டர் ஜாமை வெளில எடுத்துருவோம் " என்று இரண்டு பேர் கத்திக்கொண்டிருந்தனர்; முதலில் யாரோ வெளியில் கதை  பேசிவிட்டு நிற்கிறார்கள் … என்றுதான் நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது அவர்கள் என்னைத்தான் அழைத்தார்கள் என்பது. எழுதுவதை நிறுத்திவிட்டு வாசலில் வந்துப்பார்த்தால் இரண்டு குண்டர்கள் கையில் கத்தியுடன் நின்று கொண்டிருந்தனர் …  இரண்டு பேருமே தெரிந்தவர்கள் தான் அதில் ஒருவன் இராமநாதபுரத்திலிருந்து வந்து திரைப்பட உதவி இயக்குனர் என்ற பெயரில் ஊர் சுற்றுபவன் மற்றொருவன் பக்கத்துச் சேரியில் உள்ள சூரப்புலி. எனக்கும் அவர்களுக்கும் எவ்வித பேச்சு வார்த்தையும் கிடையாது. ஆனாலும், இரவில் இப்படி எதற்காக வந்து மிரட்டுகிறார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்த போதே சேரிப்புலி சென்னை பாசையில் மவனே உன்னை என்னப் பண்றேன் பாருனு கையில் இருந்த சிறிய கத்தியல் முகத்தை கீச்சி விடுவது போல் பாவலா காட்டினான். நான் பயந்தது போல் சற்று பின் வாங்கி கையில் இருந்த கைப்பேசியில் 112 நம்பரைப்போட்டு  காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு விபரத்தை கூறினேன்.உடனே எதிர் முனையில் இருந்த காவலர்  முகவரி உள்ளிட்ட தகவலை வாங்கிவிட்டு 10 நிமிடத்தில் உங்கள் பகுதிக்கு காவல்துறை ரோந்து வாகனம்  வந்துவிடும் என்று கூறி துண்டித்துவிட்டார்.உடனே அருகில் நின்ற உதவி போர்வை ஆசாமி  போலீசுக்கு போன் போட்டா பயந்துடுவோமா … என்று இரண்டு மூன்று குத்துகளை எனது மூக்கைப் பார்த்து சரமாரியாக விட்டான் …அவனை தடுத்து அப்படியே பிடித்து சுற்றி எனது ரூமிற்கு தள்ளி விட்டுவிட்டு, கத்தி ஆசாமியின் கையைப்பிடித்து கத்தியை வாங்கி தூரப்போட்டு , பின்காலை தட்டிவிட அவனும் கீழே விழுந்தான். பிறகு சூதாரித்து எழுந்த இருவரும் சாலையை நோக்கி வேகமாக ஓட்டமெடுத்தனர் … அந்த நேரத்தில் சரியாக  கட்டுப்பாட்டு அறையில் தகவலைப் பெற்று  அங்கு வந்து சேர்ந்த ரோந்து வாகன  காவலர்களிடம் இரண்டாவது சென்றவன் மாட்டிவிட கையில் கத்தி வைத்திருந்த ஆசாமி ஓடி விட்டான். சுற்றிலும் குறுகலான தெருக்களாய் இருந்ததால் அவனை காவலர்களும் துரத்தாமல் விட்டுவிட்டனர். பிறகு பிடிபட்டவனின் முதுகில்  ஐந்தாறு  அடிகளைப் போட்டு வண்டியில் ஏற்றிவிட்டு என்னிடமும்  " ஏறுங்கள் வடபழனி காவல் நிலையம் கொண்டு செல்கிறோம் " என்றனர்; நான் எனது வண்டியில் வருகிறேன் என்று கூறி என் பைக்கை எடுத்து அவர்களை பின் தொடர்ந்தேன். காவல் நிலையம் போனதும் தான் எனக்குத்தெரிந்தது நமது கால்த் தடுக்கி ரௌடியை   காப்பாற்ற அந்த காவல் நிலையத்திலேயே ஒரு ஊழியர் இருக்கிறார் என்பது; அதாவது அந்த காவல்நிலைய ஆய்வாளரின் வாகன ஓட்டுனரும் ரௌடியும் ஒரே ஊர்க்காரர்கள். அதனால் அவர் சிபாரிசு செய்ததால் கைதானவனை விட்டுவிட காவல் நிலையத்தில் உள்ள அனைவரும் தீர்மானித்து விட்டனர். ஆனால்,ஏற்கனவே நான் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து அவனைப் பிடித்ததால் என்னிடம் நாங்கள் ஏற்கனவே அறிமுகம் ஆனவர்கள்தான், ஏதோ கோபத்தில் புகார் கொடுத்துவிட்டேன்.அவனை விட்டுவிடுங்கள் என்று எழுதி கையொப்பம் போடுமாறு கூறினார்கள்.
ஆனால்,இதை இப்படி நேரடியாக கேட்டால் நன்றாக இருக்காது என்பதற்காக காவல் நிலைய ஏட்டு ஒரு கீழான தந்திரத்தை கையாண்டார். நான் காவல் நிலையம் போன உடனேயே என்னை குற்றவாளியோடு தரையில் அமர கூறியதோடு, நீங்கள் இரண்டு பேரும் சினிமா உதவி இயக்குனர்கள் ஒயின்சாப்ல போதைல சண்டைப் போட்டுள்ளீர்கள். கத்தியை வைத்து மிரட்டியவனை இருவருக்குமே தெரியாது.அதனால் நாங்கள் இராசியாக போய்விட்டோம் என்று எழுதிகொடுத்து விட்டு சென்றுவிடு அல்லது இருவரையும் சிறையில் அடைத்து விடுவேன் என்று என்னை மிரட்டினார்.ஏட்டு எவ்வளவோ சொல்லியும் நான் இதற்கு உடன்படாமல் மீண்டும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொள்ள முயன்றவுடன் ஏட்டு அந்தர் பல்டி அடித்து ' நீங்க எங்க வேணும்னாலும் உட்காருங்க,இல்லைன்னா வெளியே போய் நில்லுங்க " என்று கூறி முடித்துவிட்டார். வெளியே போய் நிக்கும் போது விசயத்தை கேள்விப்பட்டு நமது அறைத்தோழர்களும் சினிமா நண்பர்கள் சிலரும் காவல் நிலையத்தில் குமிந்து விட்டனர்.
அதே நேரத்தில் ஆய்வாளரின் வாகன ஓட்டுனர் என்னிடம் வந்து;
' வழக்கு ஒன்றும் இல்லாமல் முடிச்சிட்டுப்போங்க "
"ஏன்?"
'அவன் நல்லப்பையன், எங்க ஊர்க்காரன்தான்."
'நல்லப்பையன் எதுக்கு பதினொரு மணிக்கு கத்தியை எடுத்துட்டு எங்க ரூமிற்கு வரப்போறான். ரெண்டு பேரும் எதுக்கு வந்தாங்க,இப்ப அவனையும் பிடிச்சாதானே உண்மை தெரியும்? "
" ஒன்னும் காரணம் கிடையாதுனு சொல்றான்,அந்த அறையில இருக்குறவங்க எப்பவுமே நல்லா ஜாலியா இருக்குறாங்க,பைக்கு காரெல்லாம் வெச்சிருக்காங்க, அடிக்கடி மொபைலில் இயக்குனர் ஷங்கர்ட்ட பேசுறேன், விஜய்க்கு கதை சொல்றேன்னு கடுப்படிப்பாங்க அதான், கொஞ்சம் கலாய்ச்சி வைக்கலாம்னு போனோம்னு சொல்றான்"

" அதெல்லாம் சும்மா கதைங்க,கத்தியோட ரூமிற்கு வந்து குத்த வந்தவன எப்படிங்க விடுவீங்க? "
"நான்தான் சொல்றேனே "
"நீங்க யாருங்க எனக்கு சொல்றதுக்கு,ஒரு காவலரா இருந்துகிட்டு இப்படி குற்றவாளிக்கு பரிந்து பேசுற உங்கள மாதிரி ஆளுங்க காவல்துறைல இருக்கிறதுனால தாங்க ,இவனை மாதிரி இருக்கிறவங்களுக்கு இவ்வளவு தைரியும் வருது. "

இப்படி நான் கூறியதும் எனது நண்பர்கள் சிலரும் அவரிடம் நீங்கப் போங்க சார் நாங்கப் பாத்துக்கிறோம், இப்பவே கமிஷ்னரோட பர்சனல் நம்பருக்கு போன் பண்ணி
போலிஸ்காரரே கிருமினலுக்கு ஆதரவா பேசுறாருனு சொல்றோம்னு கூற. உடனே அவர் நான் போலிஸ் இல்லீங்க,இன்ஸ்பெக்டரின் தனிப்பட்ட வாகன ஓட்டுனர் அவ்வளவுதான். நல்ல குடும்பத்தை சேர்ந்த பையன் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து இப்படி சீரழிஞ்சிப் போயிட்டான். அவனோட தங்கச்சிக்கு கூட அடுத்த வாரம் கல்யாணம் இருக்கு, ஏற்கனவே இது போல ஊர்ல ஒரு வழக்குல மாட்டி இப்ப ஜாமீன்ல இருக்கான். இப்ப இதுலயும் உள்ளே போனால் அவன் வாழ்க்கையே போய்விடும்.அதான் அவ்வளவு தூரம் சொன்னேன்,தவறாக நினைக்க வேண்டாம் என்று கலக்கமாக கூறிவிட்டு ஓட்டுனர் சென்றுவிட்டார்.
பிறகு எனது நண்பர்களில் பலரும்  வா உள்ளப்போயி என்ன நடக்குதுனு பார்ப்போம்னு போனால் … ரைட்டரின் இடது பக்கம் தரையில் அமர்ந்திருந்தவன் ஓடி வந்து என் கால்களை பிடித்து … தெரியாமல் செய்துவிட்டேன், நீங்களும் நானும் ஒரே மதத்தை சேர்ந்தவர்கள், எனது தங்கச்சிக்கு கல்யாணம் வேறு இருக்கிறது,எல்லாம் போதையால் செய்த தவறு,என்னை மன்னித்துவிடுங்கள் என்றெல்லாம் கூறி; கதற, உடனே ஏட்டு குடிகாரனுக்கு மதத்தைப் பற்றி பேச அருகதையே கிடையாது ,பேசாமல் இரு, உன்ன மாதிரி ஆளுகளெல்லாம் ஜெயிலில் போய் இறைவனை தொழுதால் தான் உண்டு. நீயெல்லாம் ஒரு மனுசனா இருக்கியே, மானங்கெட்டவன என்று ஆரம்பித்து வண்டி வண்டியாக திட்ட எனது ஆத்திரமெல்லாம் அந்த வார்த்தையில் கரைந்து ஓடிவிட்டது.
தீமைக்கு பயந்து நன்மையை வெறுப்பதை விட அன்பிற்கு பணிந்து அதனால் நாளை தீமையே நிகழ்ந்தாலும் கூட அதை எதிர்கொள்வோம். என்று எண்ணி அவனை விடச்சொல்லி, கையெழுத்து
போட்டு விட்டு கிளம்பினேன். அதன் பிறகு பல சந்தர்ப்பங்களில் பல சூழ்நிலைகளில் அவனைப்பார்த்துள்ளேன். என்னை பார்த்ததும் ஒன்று குனிந்து விடுவான் அல்லது திரும்பிக்கொள்வான் … குற்ற  உணர்ச்சியாய் இருக்கலாம்.
நான் கூறிய சம்பவத்தில் வந்துள்ள நான் உட்பட மூன்று பாத்திரங்களுமே தங்கள் கடமையை ஒழுங்காக செய்யவில்லை.ஆனால்,அதனால் தீமைகள் எதுவும் நிகழவில்லை. காவல் பணியில் இருப்பவர்களும் இப்படி பல நேரத்தில் சாதாரண மனிதர்களைப் போலவே செயல்படுகிறார்கள்.
போராட்டத்தை ஒடுக்கத் தானே ஆட்டோவை எரிக்கிறார்கள்.
ஆள்வோர்களின் ஆணைக்கேற்ப அப்பாவிகள் மேல் வழக்கையும் பதிகிறார்கள்.இன்னொரு மாநிலத்தில் இருக்கும் குற்றவாளிகளை பிடிக்க அங்குள்ள காவல்துறையினரிடம் தெரிவிக்காமலே செல்கிறார்கள்.
பல காவல் நிலையங்களிலும் சில தனியார் இடங்களிலும் காவலர்கள் நடத்தும் மனிதவதை கூடங்கள் வெளிப்படையாகவும் இரகசியமாகவும் இயங்குகிறது. உயரதிகாரியின் கட்டளை, உண்மையின் கடமை,தங்களின் மனசாட்சி, அரசியல் குறுக்கீடு, பணிச்சுமை என்று எத்தனையோ இன்னல்களை சந்தித்து வரும் காவல் பணியில் இருக்கும் ஒவ்வெருவரும் ஆறுச்சாமிகளாத்தான் வலம் வருகிறார்கள். இதன் காரணமாகவே நீதியை பல நேரங்களில் நிதியும் வன்முறையும் தீர்மானித்து விடுகிறது.

இன்னும் பேசுவேன் …

ஏகப்பிரியன் DYT

amyogatrust.blogspot.com
aumherbals.blogspot.com

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...