I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: வளர்ச்சி அரக்கன்

Monday, 5 February 2018

வளர்ச்சி அரக்கன்

மனதோடு பேசுகிறேன்

10.வளர்ச்சி என்ற விற்பனை கோசம்

" ஆண்டாள் ஆண்டாலும்
தமிழ்த்தாய் ஆண்டாலும் யாருக்கும் கவல இல்ல
பாபரை வெட்டினாலும்
இராமரை கட்டினாலும்
ஒரு முடி உதிரவில்ல
உணர்ச்சியை துண்டி உரிமையை
திருடும் தந்திரம் தெரியவில்ல
வளத்தை விக்கிறதும்
குப்பையை வாங்குறதும்
வளர்ச்சி திட்டமில்ல
இது மத,அரசியல்
அடிமைகளுக்கு  புரியவில்ல "

உலக மயமாக்கலின் பயனை இன்றுதான் மிக அழகாக உணர்ந்து வருகிறோம். சுய சார்ப்பற்ற ஒரு தன்மையை பரீட்ச்சித்து பார்க்கும் போது அதன் விளைவு இப்படித்தான் இருக்கும் என்று அன்றே பல இந்திய பொருளாதார அறிஞர்கள் கூறினார்கள். அதை அன்று ஆண்ட அரசியல் வியாதிகள் கேட்கவில்லை. உலகமயமாக்கல் ஒப்பந்தத்தில் காங்கிரஸ் அரசு கையொப்பமிட முனைந்த போது கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசிற்கு கொடுத்துவந்த ஆதரவை விலக்கியது. பிறகு  மெஜாரிட்டியை நிரூபிக்க நடந்த வாக்கெடுப்பில் காங்கிரஸ் பல தில்லுமுல்லுகளை செய்து வென்று இந்தியாவின் அழிவுப்பாதைக்கு அச்சாரம் போட்டது. உலகமயம்,தனியார் மயம் ஒப்பந்தத்தை இந்தியாவிற்கு காங்கிரஸ் அரசு கொண்டு வந்தாலும் கூட அந்த கட்சியால் இந்திய வளங்களை வேகமாக விற்க முடியவில்லை. அதற்கு ஒரு காரணம் கம்யூனிஸ்ட் போராட்டங்கள் இன்னொரு முக்கியக்காரணம் பாஜக. பாரதிய ஜனதாவின் தேசப்பற்று,சுதேச சிந்தனை போன்றவை  காங்கிரஸின் விற்பனை வேகத்தை அதிகமாக பாதித்தது. "புரட்சிக்காரனின் கையில் ஆட்சியை கொடுத்தால் அவன் புரட்சிக்கு எதிரானவனாக மாறிவிடுவான்." என்ற நடைமுறை சிந்தாந்தத்தை மீண்டும் மெய்ப்பிக்கும் விதமாக பாரதிய ஜனதா ஆட்சி வந்ததும் ஆதார்,நீட்,மீத்தேன்,வெளிநாட்டு பல்கலை கழகங்களுக்கு அனுமதி, இந்தியாவில் மலிந்த பொருள்களையேவெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தல்,அரசு துறைகளில் 100 % தனியார் முதலீடு, சில்லரை வர்த்தகத்தில் பெரு நிறுவனங்களை ஈடுபடுத்தல்,பணமில்லா வியாபாரம் போன்ற அத்தனை விசயத்தையும் முழு வேகத்தோடு பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது. நாட்டை விற்பதில்  காங்கிரஸிற்கு  ஒரு தயக்கமும் தடுமாற்றமும் அச்ச உணர்வும் அடிப்படையிலேயே இருந்தது. ஆனால், இன்றைய ஆளும் கட்சிக்கு அது துளியும் இல்லை. தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்று கூறிக்கொண்டே பல புதிய அனுமின் நிலையங்களை இந்தப் படுபாதக அரசால் ஏற்படுத்த முடிகிறது.மீத்தேன்,ஹைட்ரோ கார்பன்,NEET,GST,உணவு பாதுகாப்பு சட்டம்,தேசிய மருத்துவ ஆணையம் அமைத்தல்,வெளிநாட்டு விதைகளை கொள்முதல் செய்தல் போன்ற எத்தனையோ புதுப்புது ஒப்பந்தங்களை இன்றைய அரசு நொடியில் போட்டு விடுகிறது.இராமர் கோவில்,ஆண்டாள்,சமஸ்கிருத திணிப்பு போன்றவற்றில் தேசியம்  பேசிக்கொண்டே நாட்டை விற்க பன்னாட்டிற்கு வேகமாக ஊழியம் செய்துவருகிறது. வாஜ்பாய் ஆட்சியில் கொண்டு வந்த நாற்கர சாலை திட்டமும் அதை தொடர்ந்து வந்த டோல்கேட்டும்  இன்றும் நமது உரிமை சுரண்டும் வியாபாரமாய் வளர்ந்து விட்டதைப்போலவே இன்று மோடி கொண்டு வரும் ஒவ்வெரு வியாபாரத் திட்டமும் வாழ்வெல்லாம் நமது கழுத்தை நெரிக்க காத்திருக்கிறது. இனி இந்த வர்த்தக வளையில் இருந்து இந்தியா மீள்வதற்கு வழியே தென்படவில்லை. ஏனென்றால் அடுத்து காங்கிரஸ் ஆட்சி வந்தாலும் கூட மோடி போட்ட எந்த ஒப்பந்தமும் காலாவதி ஆகப்போவது இல்லை. என்பதோடு எஞ்சியுள்ள ஒரு சில துறைகளையும் விற்க காங்கிரஸ் முனைந்தால் அதை தடுக்க குரல் கொடுக்கும் தார்மீக உரிமை  பாஜவுக்கு கிடையாது.சுதேசம் பேசி இந்தியாவை காப்பதாய் கூறியவர்களே இந்திய வளங்களை விற்க ஏற்படுத்தப்பட்ட ஏஜன்டுகள் தான் என்பது தெரிந்து விட்ட  போது. இவர்களை பார்த்து எந்த அரசியல்  வியாபாரியும் இனி பயப்பட மாட்டார்கள்.தற்போது மத்திய அரசு நிதிநிலை அறிக்கையிலும் கூட மருத்துவ காப்பீடு திட்டம்,பல்வேறு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சலுகை போன்றவற்றை அறிவித்துவிட்டு விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி,புயல் நிவாரணம்,தமிழக சிறுதொழில் பாதுகாப்பு போன்றவற்றுக்கு எதையும் செய்யாமல் விவசாய விற்பனை கூடம் அமைக்கப்படும்,விவசாயிகள் வருமானத்தை இரண்டு மடங்கு உயர்த்தப்படும்,விவசாயிகளுக்கு அதிக கடன் வழங்கப்படும்,இயற்கை விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று வெறுமனே அறிவித்துள்ளனர். மருத்துவ காப்பீட்டிற்கு ஒதுக்கும் பணம் அப்படியே நமது பணத்தை கொத்தாக எடுத்து வெளிநாட்டு கம்பெனிகளுக்கு கொடுக்கும் திட்டம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. வெளிநாட்டு விதைகளையும் பூச்சிக்கொல்லிகளையும் உணவுப்பொருளையும் அளவிற்கு  அதிகமாக  இறக்குமதி செய்து இந்திய விவசாயிகளையும் விவசாயத்தையும் அழித்த அரசு. விவசாய கடனை தள்ளுபடி செய்ய வக்கற்ற அரசு இன்னும்  அதிகமாக விவசாயிகளுக்கு கடன் கொடுக்குமாம். ஏன்ட முட்டாப்பயலே இருக்கிற கடன அடைக்க முடியாமதான் பாதிபேரு செத்து போனான். இன்னும் மீதம் இருக்கிற விவசாயிகளுக்கும் அதிகமா கடன் கொடுத்து கொல்லப்போறியானு கேட்டா தேசப்பக்தன் வேடத்தில் இருக்கும் பன்னாட்டு படைகள் நம்மீது பாய்ந்து விடுவதோடு இவன் ஜோசப்,அவன் சைமன்,இவரு சாகுல்,அவரு உசேன் என்றெல்லாம் கூறி இவர்கள் எல்லாம் வெளிநாட்டு மதத்தை பின்பற்று பவர்களாய் இருப்பதால் மோடி இந்து என்ற காரணத்தால் எதிர்க்கிறார்கள் என்று கூப்பாடு போடுகிறார்கள். ஏன்டா,தேசத்தையே மொத்தமாக அடமானம் வைப்பவன் இந்து என்பதற்காக யாரும் எதிர்க்கவில்லை. எங்கள் இந்தியாவை வெளிநாட்டு அடிமையாய் ஆக்காதே என்று தான் எதிர்க்கிறார்கள்.நீங்க இந்தியாவை சுயசார்பான நாடாக வைப்பதற்கு போராடினால் அனைவருமே ஆதரிப்பார்கள். நீங்கள் இந்தியாவை இந்து நாடாக்குவோம் என்று கூறிக்கொண்டே மொத்தமாக வெளிநாட்டுக்கு எழுதி வைத்தால் எல்லா இந்தியனும் சேர்ந்து செருப்பால தானே அடிப்பான், இந்துவின் செருப்புதான் அடிக்கனும் கிருத்தவ,இஸ்லாம் செருப்புகள் எல்லாம் அடிக்கக் கூடாதுனா என்னப்பா நியாயம்?
அரசியல் என்று மட்டும் இல்லை மதம்,சாதி,மொழி,கொள்கை என்று எந்தெந்த துறைகளில் எல்லாம் பேசப்படுகிறதோ,யாரெல்லாம் அப்படி பேசுகிறார்களோ இவர்கள் அனைவரும் சத்தியத்தின் எதிரிகள். ஆனால்,எல்லா அடையாளங்களையும் கடந்து தங்கள் உரிமைக்காக,உணவிற்காக,வளத்திற்காக,தேசத்திற்காக,நாட்டிற்காக போராடுபவர்களே அறத்தின் காவலர்கள். சாதியும் மதமும் மனித குலத்திற்கு பலப்பல நன்மைகளை செய்து பலத்தைக் கொடுத்து ஜீரணமாகி கழிவாக வெளியேறி விட்டது. இப்பொழுது அது வீதியெல்லாம் சாக்கடையாக ஓடுகிறது. ஒவ்வெரு வீட்டிலிருந்தும் இந்த சாக்கடை புறப்படத்தான் செய்யும் ஆனால்,அது பிறரின் ஆரோக்கியத்தை கெடுத்துவிடாமல் பார்க்க வேண்டும். முடிந்தால் அதை பாதாள சாக்கடையாக்கி மண்ணிற்கு உரமாக பயன்படுத்த வேண்டும். மாறாக எனது கழிவு நல்லது,எனது கழிவு நல்லது என்று ஒவ்வெருவரும்  கூறிக்கொண்டே அதை போவோர் வருவோர் மீது தெளிப்பது அக்கிரமம்.உரிமைக்கான குரல் என்பது எனது உணவிற்கான குரல்,எனது வாழ்விற்கான அடிப்படை,எனது சந்ததிகளின் ஆரோக்கியத்தை காப்பதற்கான கடமை,எனது வளத்தை பாதுகாப்பதற்கான முயற்சி. ஆட்சியாளர்களிடம்தனது உணவைவும் உரிமையையும் வேண்டி போராடுபவனிடம் நீ எதிர்  சாக்கடையை சேர்ந்தவன் அதனால் தான் போராடுகிறாய் என்று கூறுவது மிகப்பெரிய மோசடி. இப்படி கூறியே இன்னும் இன்னும் உலகை வஞ்சிப்பதை நிறுத்திவிட்டு உண்மையான தேசப்பக்தர்கள் எஞ்சியுள்ள நமது தேச வளங்களை பன்னாட்டு விற்பனை தரகு ஆட்சியாளர்களிடம்  இருந்து காப்பாற்ற முன்வர வேண்டும்.!
வெற்று உணர்ச்சி மட்டுமல்ல சுதந்திர காற்றும் ஒருபிடி சோறும் நமக்கும் நமது குழந்தைகளுக்கும் அடிப்படைத்தேவை. அதைப் பெறுவதற்கு நாட்டின் வளத்தையும் இறையாண்மையையும் வெளிநாட்டில்  அடமானம் வைப்பதை தவிர வேறு சுயசார்பாக வாழ்வதற்கு உண்டான நல்ல வழிகளை மத்திய அரசு கண்டறிய வேண்டும். ரூபாய் நோட்டு தடை,GST போன்ற எத்தனையோ இன்னல்களை மத்திய அரசு நம்மீது திணித்தது. இதன் மூலம் கிட்டத்தட்ட நூறு பேர்கள் இறந்துள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்பட்ட சிறு,குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இலட்சக்கணக்கான இந்திய மக்கள் சொல்ல முடியாத துயரத்தை எல்லாம் தாங்கிக் கொண்டார்கள்.
நாங்கள் இழந்த இத்தனை உயிர்களும் இத்தனை இன்னல்களும் நாடு சுயசார்பாக விளங்க எதிர் தலைமுறையினர் வாழ்க்கை பாதுகாப்பாக விளங்க எடுக்கப்பட்ட முயற்சியாக இருந்திருந்தால் உள்ளபடியே ஜெய்ஹிந்த் என்று கூறி இந்த துன்பங்களை தியாகமாக போற்றி இருப்போம். ஆனால்,தனது இறுதி முழுமையான பட்ஜெட்டையும் தாக்கல் செய்து விட்ட மத்திய அரசு இன்னும் இன்னும் நாட்டின் வளத்தை அடிமையாக்குவதையே வாடிக்கையாக வைத்துள்ளது. என்பதை தெளிவு படுத்துகிறது.இதனால் மக்கள் தாங்க முடியாத அச்ச உணர்வில் தவித்து வருகிறார்கள். இன்னும் பாஜக பரிவாரங்கள் மட்டுமே எருமை மாட்டின் மீது மழைபொழிவதைப்போல சுகமாக உணர்கிறார்கள். இந்த நேரத்தில் இந்திய வாழ்க்கை முறையின் மீதும் தமிழர் வாழ்க்கை முறையின் மீதும் உண்மையான ஈடுபாடு கொண்டு வெளிநாட்டு மொழியில் இருந்த தனது பெயரை இந்திய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் மாற்றி உள்ளவர்களை ஏதோ ஆகப்பெரிய மோசடி செய்து விட்டவர்களைப்போல சித்தரிப்பது மிக கொடுரமான ஒரு அணுகுமுறை.
உண்மையில் ஏதோ ஒரு காலத்தில் தீண்டாமை சாதிய கொடுமை போன்ற ஏதோ ஒரு விசயத்தில் பாதிக்கப்பட்டு அல்லது பாஜா பக்தர்கள் கூறுவதைப்போல சோத்துக்கு வழியில்லாமல்,அன்னியரை எதிர்க்க துணிவில்லாமல் வெளிநாட்டு மதங்களில் தன்னை இணைத்துக் கொண்டவர்களின் வாரிசுகள் தங்கள் தாய்நாட்டின் சிறப்பை உணர்ந்து மீண்டும் தங்கள் பெயரை இந்திய மொழிகளில் மாற்றுவது- இந்திய சுதேசம் பேசி, இந்தியப்பெயரோடு வாழ்ந்து தேச வளத்தையே விற்பனை செய்வதை விட மிக கேவலமான செயல் என்று கூறி ஏமாற்று,பித்தலாட்ட வேலைகளை செய்வது மிகப்பெரிய மோசடி. வளர்ச்சி என்ற வேசத்தில் வந்த விற்பனை என்ற நரியின் வேசம் முழுவதும் கலைந்துவிட்டது. இனி நரி தப்பிப்பிழைக்க வழியே இல்லை. ஆனால்,அந்த நரியோடு இந்த நாடும் வீழ்கிறதே என்பதே நமது கவலை. அதில் நமது தலைமுறையும் இருக்கப்போகிறதே  என்பதே நமது பரிதவிப்பு.!

தொடருவேன் …

-ஏகப்பிரியன் DYT

amyogatrust.blogspot.com
aumherbals.blogspot.com

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...