I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: மனநலம்

Sunday, 13 January 2019

மனநலம்

எது மிகப்பெரிய வெற்றி.

எதுவும் வேண்டாத நிலையே மிகப்பெரிய வெற்றி. எல்லாம் இருக்கிறது என்று மனம் அமைதியாய் இருக்கிற நிலையே மிகப்பெரிய வெற்றி.

எவரோடும் நெல்முனை அளவும் பிணக்கு இல்லை என்ற மனோநிலையே மிகச்சிறந்த வெற்றி. யாரைப் பற்றி நினைக்கிறபோதும் முகத்தில் ஒரு புன்னகை தோன்றுகிற நிலையே அற்புதமான வெற்றி.

கயவர்களை, திருடர்களை, கொள்ளைக்காரர்களை ஏமாற்றுபவர்களை நினைக்கும் போதும் அப்படி புன்னகை செய்ய முடியுமா?

வெற்றி பெற்றவர் செய்ய முடியும். நலமாய் திருந்த வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய முடியும். கெட்டது இருப்பதால்தான் நல்லதின் சிறப்பு தெரிகிறது.

கொடுமை இருப்பதால்தான் உதவிகள் மிக உன்னதமாகப் புரிகின்றன. வெறுப்பு இருப்பதால்தான் அன்புக்கு அர்த்தம் இருக்கிறது.

எவ்வளவு நாள் அடக்கி ஆள முடியும்? எவ்வளவு கொடுமை செய்ய முடியும்? ஏதோ ஒரு கணம், வாழ்க்கை மல்லாக்கத் தள்ளி தொண்டைக் குழியில் கால் வைத்து அக்கிரமம் செய்பவரை உதைக்கத் தொடங்கி விடும்.

கொடுமைப்படுத்துபவரை நினைத்து மெல்லியதாய் புன்முறுவல் செய்து நான் இருக்கிறேன் என்று உதவிக்கு போகிற நிலையே மிகமிக உன்னதமான வெற்றி.

எல்லா உயிர்களையும் நேசிக்கிற ஒரு மனப்பக்குவம் தனிமையில் இருக்கும்போது வரும். யோகா என்ற உடற்பயிற்சி, தியானம் என்ற மனப்பயிற்சி செய்வதற்கு முன்பே தனிமையில் மௌனமாக இருக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

மனம் என்ன செய்கிறது என்று பாருங்கள். மனம் பெருங்குரலோடு பேசத் தொடங்கும். எந்த அர்த்தமுமின்றி, எந்தப் பயனுமின்றி, எந்தவித குறிக்கோளுமின்றி அது குதிப்பதை உற்றுப் பார்க்க பேச்சு குறையும்.

பேச்சு குறையும்போது, மெல்ல அது நிற்கும்போது மூச்சு மாறுவதை நீங்கள் கவனிக்க முடியும். சிலநேரம் மூச்சுவிடுதலும் கூட நின்று அடர்த்தியாகி பின்பு தடுக்கென்று ஓடத் தொடங்கும்.

இதுதான் பேச்சு மூச்சற்று உள்ளே ஆழ்ந்து விடுவது. இது மிக மிக முக்கியமான விஷயம். பேச்சு நிற்க மூச்சு நிற்கும். மூச்சு நிற்க பேச்சு நிற்கும். அதுவே ஒரு தனித்த ஓட்டத்தைக் கவனித்துக் கொள்ளும்.

உள்ளுக்குள்ளே உங்களை கவனிக்கத் தொடங்குகிறபோது ஏற்படுகிற நம்பிக்கை தான் பல்வேறு இடங்களில் செயலாக வெளிப்படுகிறது. நம்பிக்கையினால் ஏற்படுகிற அமைதி எதிரில் இருப்பவரை சரியாக உற்றுப் பார்க்கிறது. மிகத் துல்லியமாக பதிலளிக்கிறது.

எப்போது எதிரே இருப்பவரை புரிந்து கொண்டு அவருக்கு சரியானபடி எதிரொலிக்கத் தெரிந்துவிட்டதோ அப்போது உங்களுடைய செயல்களும் மிகத் துல்லியமாக இருக்கும்.

அமைதிதான் ஒருவருக்கு அற்புதமான சொத்து. தனித்து அமர்ந்து தனிமையை உணர்ந்து ஆழ்ந்து அவதானிக்கிற கலை எளிதில் வருவதன்று. திரும்ப திரும்ப முயற்சி செய்ய ஒரு நேரத்தில் இது பிடிபட்டுவிடும்.

ஏதோ ஒரு கணத்தில் சறுக்கினால் போல் மனதிற்குள் இறங்கி நீங்கள் பார்த்துவிடக்கூடும். யாருக்கு எப்போது நேரும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு உடனடியாகவும், சிலருக்கு சில ஆண்டுகளுக்குப் பிறகும் நேரும்.

ஆனால் நேரும் வரை தன்னை இடையறாது உற்றுப் பார்த்துக் கொண்டு தனிமையில் அமர்வது என்பதுதான் தவம். இப்படி உட்காருவதற்கு முயற்சிக்கிறீர்களே அதுதான் வரம்.

வரம் வாங்கி வந்தவர்களால்தான் இப்படி தனிமையில் தன்னை உற்று கவனிக்க முடியும். கவனித்து மேம்பட முடியும்.

-- எழுத்துச் சித்தர்,
 பாலகுமாரனின்
 "வெற்றி வேண்டுமெனில்"
கட்டுரையிலிருந்து.
www.aumherbals.com

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...