ராஜயோகச்சுருக்கம்
ஆலயத்திற்குப் போவதோ, நெற்றியில் சின்னங்களை இட்டுக் கொள்வதோ, விசித்திரமாக உடை அணிந்து கொள்வதோ மதம் ஆகிவிடாது. உங்கள் இதயம் திறக்கவில்லை என்றால், நீங்கள் கடவுளை உணரவில்லை என்றால் எல்லாமே வீண்.
-
மதச் சின்னங்கள் மற்றும் அது போன்ற எல்லாம் நமக்கு உதவுமானால் நல்லது, அதை வரவேற்கலாம். மனம் பக்குவமடைந்துவிட்டல் புறச்சடங்குகள் எதுவும் தேவையில்லை. உண்மையான ஆன்மீக அனுபூதி என்பது இதுதான் .
-
பொதுவாக மனிதன் இந்தப் புறச் சடங்குகளையே மதமாகக் கொள்கிறான். கோயிலுக்குப் போவது ஆன்மீக வாழ்வாகி விடுகிறது, புரோகிதருக்கு ஏதோ கொடுத்துவிட்டால் அதுவும் ஆன்மீக வாழ்வு. இத்தகைய எண்ணங்கள் ஆபத்தானவை, அழிவை விளைப்பவை; அவை உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும்.
-
யார் மனத்தைக் கடந்த உண்மையை உணர்கிறாரோ, தன் சொந்த இயல்பிலேயே யார் ஆன்மாவை உணர்கிறாரோ, யார் கடவுளை நேருக்கு நேர் காண்கிறாரோ, எல்லாவற்றிலும் கடவுளை மட்டுமே காண்கிறாரோ அவரே ரிஷி. நீ ஒரு ரிஷியாகாதவரை, உனக்கு ஆன்மீக வாழ்க்கை இல்லை.
-
நீங்கள் ரிஷியான பிறகே உங்களுக்கு ஆன்மீகம் என்பது ஆரம்பமாகிறது. இப்போது செய்வதெல்லாம் அதற்குத் தயார்படுத்துவதற்கான முயற்சிகளே. அதன் பிறகே உங்களிடம் ஆன்மீகம் என்பது தோன்றுகிறது. இப்பொழுது நீங்கள் செய்வதெல்லாம் அறிவுப் பயிற்சியும் உடம்பை வதைக்கின்ற முயற்சிகளுமே.
-
முக்தியை விரும்புகின்ற ஒவ்வொருவரும் ரிஷிநிலை வழியாகச் சென்றாக வேண்டும், மந்திரத்தை நேருக்கு நேர் தரிசிக்க வேண்டும், கடவுளைக் காண வேண்டும் என்பதைக் தெளிவாக, ஆணித்தரமாக நமது மதம் கூறியிருக்கிறது. இதுவே முக்தி.
-
ரிஷிநிலையை அடைந்துவிட்டால் சாஸ்திரங்களின் கருத்துக்களை நாமாகவே எளிதில் அறிந்துகொள்ள முடியும் ; அவற்றின் பொருளை நாமே புரிந்துகொள்ள முடியும்; நமக்கு எது தேவையோ அதை ஆராய்ந்து, நாமே உண்மையைப் புரிந்துகொள்ள இயலும்.
-
அந்தப் புராதன ரிஷிகள் மகத்தானவர்கள். நாம் அவர்களை விட மகத்தானவர்களாக வேண்டும். அவர்கள் கடந்த காலத்தில் மாபெரும் காரியங்களைச் செய்தார்கள். நாம் அவர்களைவிட மகத்தான காரியங்களைச் செய்ய வேண்டும்.
-
நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள். நீங்கள் உங்களை வீரர்கள் என்று நம்பினால் வீரர்கள் ஆவீர்கள், ரிஷிகள் என்று நம்பினால் நாளைக்கே ரிஷிகளாவீர்கள். உங்களை எதனாலும் தடுக்க முடியாது.
-
ஒன்றுக்கு ஒன்று முரணானவை போன்றும் சண்டையிடுபவை போன்றும் தோன்றுகின்ற நமது மதப் பிரிவுகள் அனைத்திற்கும் பொதுவான ஒரு கோட்பாடு இருக்குமானால், அது, எல்லா பெருமையும் ஆற்றலும் தூய்மையும் ஆன்மாவில் ஏற்கனவே இருக்கிறது என்பதுதான்.
-
எல்லா ஆற்றல்களும் உங்களுள் இருக்கிறது. உங்களால் எதையும் செய்ய முடியும் என்பதை நம்புங்கள்.நீங்கள் பலவீனர்கள் என்று எண்ணாதீர்கள்.
-
நீங்கள் எல்லாவற்றையும் செய்ய முடியும், யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல் உங்களால் எதையும் செய்ய முடியும். எல்லா ஆற்றலும் ஆன்மாவில் இருக்கிறது. எழுந்திருங்கள்! உங்கள் உள்ளிருக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துங்கள்.!
-சுவாமி விவேகானந்தர்
www.aumherbals.com
No comments:
Post a Comment