தடுப்பூசிக் குறித்து நேரடி விவாதத்துக்குத் தயார் – மருத்துவர். புகழேந்தி அறிவிப்பு.
தடுப்பூசிகள் குறித்துத் தமிழகமெங்கும் வாத பிரதிவாதங்கள் நடந்து வருகின்றது. மக்கள் முன்னிலையிலோ, மருத்துவர்கள் முன்னிலையிலோ இதுக்குறித்துத் தான் நேரடி விவாதத்துக்குத் தயாராக இருப்பதாக அறிவிக்குமாறு இன்று தொலைப்பேசி உரையாடலின்போது மருத்துவர். புகழேந்தி தெரிவித்தார். தேதி இடம் குறித்து மருத்துவர். புகழேந்தியிடம் கலந்து முடிவு செய்யலாம். யார் இந்தப் புகழேந்தி என்று ஒரு மருத்துவர் என்று கேள்வி எழுப்பியுள்ளார். புகழேந்தியை அறியாதவர்களுக்கு அவரைப் பற்றிய சிறுகுறிப்பு.
கல்பாக்கத்தில் மருத்துவராகப் பணிபுரியும் மருத்துவர். புகழேந்தி எம்பிபிஎஸ் படிக்கும்போது தங்கப்பதக்கம் பெற்றவர். சமூகநல அக்கறையோடு கல்பாக்க அணுக்கதிர் வீச்சுக் குறித்து விரிவாக ஆய்வு செய்து வருபவர். சிற்றூர் மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் எனும் நோக்கில் வெளிநாட்டு வாய்ப்புகளை மறுத்தவர். மனசாட்சிக்கு விரோதமாகக் கோடிகளைச் சுருட்டும் மருத்துவர்கள் நடுவில் இவர் ஒரு ‘மக்கள் மருத்துவர்’. இன்றளவும் மருந்துகளையும் உள்ளடக்கி மக்களிடம் வெறும் 20 ரூபாய் மட்டுமே கட்டணம் வாங்குபவர். சுருக்கமாகச் சொன்னால் ஐஏஎஸ் அதிகாரிகளுள் எப்படி ஒரு ‘சகாயமோ’, அப்படி மருத்துவர்களில் ‘புகழேந்தி’. இவரைப் பற்றி முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி டி.கே.பாசு கூறிய கருத்து: “மருத்துவர் புகழேந்தி ஒரு முட்டாள். ஆனால் ஒவ்வொரு சிற்றூரிலும் இதுபோன்ற முட்டாள்கள் நமக்கு வேண்டும்”.
சிலர் தடுப்பூசிக்கு எதிரான கேள்விகளை ‘அறிவியலுக்கு முரண்பாடானதாக’ மாற்றியமைக்க முயலுகின்றனர். மக்களுக்கான மருத்துவம் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில் சிக்கியிருக்கிறது. மருந்து நிறுவனங்களின் செலவில் வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் போகும் மருத்துவர்கள் வேண்டுமானால் இதுகுறித்துக் கவலைப்படாமல் இருக்கலாம். ஆனால் நாம் அனைத்து விதத்திலும் விழிப்பாக இருக்க வேண்டியுள்ளது. அய்யங்கள் அனைத்தையும் தெளிவுப்படுத்துங்கள் எனக் கேட்கிறோம். கர்நாடகாவில் பெற்றோர்கள் தடுப்பூசி திட்டத்துக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். புதுச்சேரி முதல்வர் விருப்பப்பட்டவர்கள் மட்டும் போட்டுக் கொள்ளலாம் என அறிவித்திருக்கிறார் என செய்திகள் வருகிறது.
சமூகநலம் குறித்து ஓர் அய்யம் ஏற்படும்போது அதுகுறித்துக் கேள்வி கேட்கும் உரிமை அனைத்து குடிமக்களுக்கும் உண்டு. ஆனால் உடனே நீ ஒரு மருத்துவ அறிஞரா எனக் கேட்கிறார்கள். சமூகநீதியை குறித்துக் கேள்வி எழுப்பிய பெரியாரை ‘அரசியல் அறிவியல்’ படித்தவரா என்றும், கல்விக்கூடங்களைத் திறந்த காமராசரை ‘கல்வியியல்’ படித்தவரா என்றும் கேள்விக் கேட்பது போன்ற அபத்தம் இது. துறை சார்ந்தவர்கள் அமைதிக் காப்பதால் மற்றவர்கள் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது. அதனால்தான் ஒரு மருத்துவரே விவாதத்தைச் சந்திக்க முன்வந்திருக்கிறார். வரவேற்போம்!
No comments:
Post a Comment